முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு

21

டெஹ்ரான்: இஸ்ரேல் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 4வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரே இரவில் 80 நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ கமென்டர்கள் உயிரிழந்தனர்.


மேலும், ஈரானின் முக்கிய தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் ஈரானில் 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் பொதுமக்கள் என்று ஈரான் கூறியுள்ளது.அதேபோல, இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


இஸ்ரேல், ஈரான் இடையே ஒப்பந்தம் செய்து போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும், மத்தியஸ்த நாடுகளான கத்தார் மற்றும் ஓமனும், பேச்சுவார்த்தை நடத்துமாறு ஈரானை அறிவுறுத்தின. ஆனால், இதனை ஏற்க ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.


இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழுமையான பதிலடி கொடுத்த பிறகே, பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருநாடுகளுக்கு இடையிலான போர் நீடித்தால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement