சாலை வெட்டு பள்ளங்களால் பகுதிவாசிகளுக்கு கடும் சிரமம் உடனடியாக சீரமைக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

கோடம்பாக்கம்,:கோடம்பாக்கம் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் ஞானவேல், கோவிந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

வார்டு 139, ம.தி.மு.க., சுப்பிரமணியன்: ஜாபர்கான்பேட்டை அண்ணாமலை நகர் மூன்றாவது தெருவில், பன்நோக்கு கட்டடம் கட்ட, எம்.எல்.ஏ., நிதியில் 33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் பூஜை நடந்தும், இன்னும் பணி துவங்கவில்லை.

ஜாபர்கான்பேட்டை சேகர் நகர், எத்திராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும். பழையதாக இருப்பதால், அடிக்கடி பழுதடைந்து குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலை உள்ளது.

வார்டு 134, பா.ஜ., உமா ஆனந்தன்: பல இடங்களில், சாலையை தோண்டி நடந்த பணிகள் முடிந்த நிலையில், சாலை சீர்செய்யப்படாமல் உள்ளது. வார்டு அலுவலகம் அருகே உள்ள 'அம்மா' குடிநீர் மையத்தை பகுதிவாசிகள் பயன்படுத்தவில்லை. மீதமாகும் உணவு பொருட்களை கழிவுநீர் கால்வாயில் கொட்டி விடுகின்றனர். அம்மா உணவகத்தை இடமாற்றம் வேண்டும்.

பல வணிக கடைகள், மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன. அதை முறைப்படுத்த வேண்டும்.

வார்டு 128, தி.மு.க., ரத்னா லோகேஸ்வரன்: விருகம்பாக்கம், வாயுபுத்திரா தெரு குடியிருப்பு பகுதியாக உள்ளது. அங்கு குப்பை சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு, குப்பை குவிப்பதை நிறுத்த வேண்டும். வார்டில் பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. அவற்றை சீர் செய்ய வேண்டும்.

புதிதாக போடப்பட்டுள்ள சாலையில், பாதாள சாக்கடை மேல் மூடிகள் பள்ளத்தில் இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. அவற்றை உயர்த்தி அமைக்க வேண்டும்.

வார்டு 132, தி.மு.க., கார்த்திகா பாஸ்கர்: வார்டில் வழங்கப்பட்டு வந்த லாரி குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. அதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

வார்டு 135, வி.சி.க., யாழினி: வார்டின் பல இடங்களில் குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அவற்றை சீர்செய்ய வேண்டும். ஓரிடத்தில் பள்ளம் தோண்டி பணி முடித்த பின் சாலையை சீரமைத்து, மற்ற பகுதிகளில் பள்ளம் தோண்ட வேண்டும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணியால் இரண்டு ஆண்டுகளாக ஆறாவது அவென்யூ சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.

வார்டு 130, தி.மு.க., பாஸ்கர்: வடபழனி அழகிரி நகர் மூன்றாவது தெருவில் கவுன்சிலர் நிதியிலும், அழகிரி நகர் ஐந்தாவது தெரு உள்ளிட்ட தெருக்களில் தி.நகர் எம்.எல்.ஏ., நிதி 25 லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.

வார்டு 129, தி.முக., ரவிசங்கர்: பல இடங்களில் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. அதை முறையாக அகற்ற வேண்டும். சாலை வெட்டு பணியால், பல இடங்கள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மண்டல குழுத்தலைவர் முருகேசன் கூறுகையில், ''மண்டலத்தில் உள்ள சாலை வெட்டுகளை சீர் செய்ய, ஒரு பகுதிக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளங்களில் கட்டட கழிவுகள் கொட்டி தற்காலிகமாக சீர்செய்ய உள்ளோம்.

வார்டு கவுன்சிலர்கள், தங்கள் வார்டில் உள்ள சாலை வெட்டு பள்ளங்கள் குறித்து, தகவல்கள் தெரிவிக்கலாம்,' என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில், 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement