ஏற்காட்டில் பனிமூட்டத்தால் 'மறைந்த' ஏரி மதியம் வரை பெடல் படகு சவாரி நிறுத்தம்

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று, வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். முக்கிய இடங்களை குடும்பத்துடன் கண்டுகளித்தனர்.


அதே சமயம் காலை முதலே, பனிமூட்டம் சூழ்ந்து, ஏற்காடு முழுதும் வெள்ளை போர்வை போர்த்தியது போன்று, அருகே உள்ளவர்கள் கூட தெரியாத நிலை காணப்பட்டது. இதமான சூழலால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைந்து, பனிமூட்டத்தை ரசித்தனர்.அதேநேரம் படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய குவிந்தனர். பனிமூட்டத்தால், ஏரி முழுதும் தெரியாததால் படகு இல்ல நிர்வாகம், பயணியர் விரும்பி சவாரி செய்யும் பெடல் படகு இயக்கத்தை நிறுத்தியது.
படகு இல்ல பணியாளர்கள் இயக்கி செல்லும் துடுப்பு படகு, மோட்டார் படகு மட்டும் இயக்கினர். இதனால் பயணியர், ஏமாற்றம் அடைந்தனர். பலர், பயணச்சீட்டை வாங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து, மோட்டார், துடுப்பு படகுகளில் சவாரி செய்தனர். மதியம், 2:00 மணிக்கு, பனிமூட்டம் விலகியதால், அதற்கு பின், பெடல் படகு இயக்கப்பட்டது. பின் அங்கிருந்த சுற்றுலா பயணியர், அதில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Advertisement