காலை உணவு கண்காணிப்பு மதிய சத்துணவுத் திட்டத்தில் இல்லை பற்றாக்குறை அமைப்பாளர்கள்; பி.டி.ஓ.,க்கள் பாராமுகம் என புகார்

மதுரை:தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் மீதான கண்காணிப்பு மதிய சத்துணவுத் திட்டத்தில் இல்லை. சத்துணவு அமைப்பாளர்கள் பற்றாக்குறை, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் (பி.டி.ஓ.,க்கள்) கண்காணிப்பு இல்லாததால் முழுமையான உணவு கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய சத்துணவு திட்டம் அமலில் உள்ளது. இதுபோல் முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022 முதல் துவங்கப்பட்டது.

காலை உணவுத் திட்டம் தனியார் மூலமும், மதிய உணவுத் திட்டம் பள்ளிகளிலேயே சத்துணவு பணியாளர்கள் சமைத்தும் வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தில் பெரும்பாலும் புகாரின்றி நடக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயன்பெறும் மதிய உணவுத் திட்டத்தில் உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்குவதில்லை. இதை கண்காணிக்க வேண்டிய சத்துணவு அமைப்பாளர்கள் பற்றாக்குறையால் ஒருவர் 4 பள்ளிகளை கண்காணிக்க வேண்டியுள்ளது, ஒட்டுமொத்தமாக கண்காணிக்க வேண்டிய பி.டி.ஓ.,க்கள் மாதம் ஒருமுறைகூட பள்ளிகளில் ஆய்வு செய்வதில்லை என்பது போன்ற புகார்கள் எழுந்துள்ளன.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: உணவு பட்டியலில் அனைத்து நாட்களிலும் முட்டை இடம் பெறும். ஆனால் மசாலா முட்டை, மிளகு முட்டை, தக்காளி மசாலா முட்டை பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. 2,4வது வாரத்தில் எலுமிச்சை சாதத்துடன் தக்காளி முட்டை, சுண்டல் வழங்க வேண்டும். இதில் சுண்டல் தனியாக வேகவைத்து கொடுக்க வேண்டும். ஆனால் உதவிபெறும் பள்ளிகள் தவிர பெரும்பாலான அரசு பள்ளிகளில் தருவதில்லை. அனைத்து வெள்ளியும் வறுத்த உருளைகிழங்கு வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

அரசு உத்தரவுப்படி சிலிண்டரில் தான் சமைக்க வேண்டும். பல பள்ளிகளில் இன்னும் விறகு அடுப்பு பயன்படுத்துகின்றனர். காலை உணவுத் திட்டத்தை கண்காணிக்கும் அளவிற்கு மதிய சத்துணவு திட்டத்தில் கண்காணிப்பு இல்லை. மதிய உணவு தொடர்பாக பல்வேறு புகார்கள் அரசின் கவனத்திற்கு வராமல் ஆளுங்கட்சியினரால் மூடி மறைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement