போதை ஏற்ற 'பேஸ்ட்' தராததால் கதவு கம்பெனி மீது குண்டு வீச்சு

மதுரை: போதை ஏற்றுவதற்காக, மரக்கதவுகளை ஒட்டும் 'பேஸ்ட்' தராததால் ஆத்திரமடைந்த இருவர், கதவு தயாரிக்கும் கம்பெனி மீது பெட்ரோல் குண்டு வீசினர்.

மதுரை, அலங்காநல்லுார் ரோட்டில் பனங்காடி செக்போஸ்ட் அருகே செல்வபூமி நகரில், டேனியல் என்பவர் ரெடிமேட் மரக்கதவு தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். கதவுகளுக்கு ஒட்டும், 'பேஸ்ட்' டப்பாக்கள் காலியானதும், அதை அப்பகுதியை சேர்ந்த சிலர் இலவசமாக வாங்கிச்செல்வர்.

சில நாட்களுக்கு முன் இருவர் வந்து கேட்டபோது, 'டப்பா காலி இல்லை' என, தெரிவித்தனர். இதுதொடர்பாக, ஊழியர்கள் சிலருடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த இருவர், பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கம்பெனி மீது வீசினர். கதவில் பட்ட பாட்டில், முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வேனின் பின்புற டயரில் பட்டு எரிந்தது. இதுதொடர்பாக கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில், 'கதவுகளை ஒட்டும் பேஸ்ட்டின் வாசனையை நுகரும்போது சிலருக்கு அது போதையை தரக்கூடியதாக இருக்கும். அந்த வாசனைக்கு அடிமையான சிலர், அதை பயன்படுத்தி வந்துள்ளனர். காலி டப்பா தராத ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement