கழிவுநீர் கால்வாயாக மாறிய பெரியாறு பாசன கால்வாய் மேலுார் நகராட்சி கழிவறை நீரும் கலக்கிறது

மேலுார்: மேலுார் பகுதியில் பெரியாறு பாசன கால்வாயில் குடியிருப்புகள், நகராட்சி கட்டண கழிப்பறையின் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கள்ளந்திரி முதல் குறிச்சிபட்டி வரை 12வது பெரியாறு பிரதான கால்வாய் செல்கிறது. இதில் நொண்டி கோவில்பட்டியில் இருந்து கொட்டகுடி வரை 16 கி.மீ., தொலைவிற்கு பெரியாறு 6வது பிரதான கால்வாய் செல்கிறது. இக்கால்வாயில் வரும் தண்ணீரால் 48 கண்மாய்கள் நிறைந்து ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயன்பெறுகிறது. கால்வாயின் இரு கரைகளிலும் வசிப்பவர்கள் சிலர் குப்பை, கழிவு நீர் குழாய்களை கால்வாயில் இணைத்துள்ளனர். அதனால் கால்வாயில் கழிவுநீர் நிரந்தரமாக தேங்கி கிடப்பதால் சுகாதாரம் என்பது சுத்தமாக கிடையாது.

விவசாய சங்கத் தலைவர் முருகன்: ஒருபோக பாசன பகுதிக்கு தண்ணீர் திறப்பதற்குள் கால்வாய் முழுவதும் மராமத்து பார்க்க வேண்டும். கரையின் இருபுறமும் வசிக்கும் பலர் செப்டி டேங்க் கட்டாமல் கழிவறை கழிவு நீரை பாசன கால்வாயில் வெளியேறுமாறு அமைத்துள்ளனர். நகராட்சி கட்டண கழிவறை தண்ணீரும் கால்வாயில் கலக்கிறது. கால்வாயில் தேங்கி கிடக்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக் கேடாக உள்ளது. கழிவு நீர் கலப்பதை தடுக்காவிட்டால் இக்கால்வாய் தண்ணீர் மூலம் விளைவிக்கப்படும் பயிர்களும் தரமற்றதாகிவிடும். கால்வாய்களை பராமரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அதிகாரிகள் மதிக்கவில்லை என்றார்.

நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில் ''நகராட்சியுடன் இணைந்து கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Advertisement