காதல் திருமணம் செய்த மகளை கட்டி துாக்கி சென்ற பெற்றோர்

ஹூப்பள்ளி,: காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, கோணிப்பையில் கட்டி பெற்றோர் துாக்கி சென்றதால், பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ஹூப்பள்ளியின், ரேணுகா நகரில் வசிப்பவர் நிரஞ்சன், 24. இவர் வாடகைக்கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இதே பகுதியில் வசிப்பவர் சுஷ்மா, 20. ஒரே பகுதியில் வசித்தும், இருவருக்கும் அறிமுகம் இருக்கவில்லை. இன்ஸ்டாகிராம் வழியாக, இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நண்பர்களாக பழகினர். நாளடைவில் இது காதலாக மாறியது.

இது சுஷ்மா குடும்பத்தினருக்கு தெரிந்தது. நிரஞ்சனும், சுஷ்மாவும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். அந்தஸ்திலும் ஏற்றத்தாழ்வு இருந்தது. எனவே மகளின் காதலை, சுஷ்மாவின் பெற்றோர் கண்டித்தனர். மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய, வரன் பார்த்தனர். ஆனால் இதற்கு மகள் சம்மதிக்கவில்லை.

நிரஞ்சனை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது என, பிடிவாதம் பிடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், வீட்டை விட்டு ஓடிவிட்டார். நிரஞ்சனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்.

அதன்பின் இருவரும், கதக்கில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பைரிதேவரகொப்பா கிராமத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இதற்கிடையே மகளை காணவில்லை என, ஹூப்பள்ளியின் நவநகர் போலீஸ் நிலையத்தில், சுஷ்மாவின் பெற்றோர் புகார் அளித்தனர். திருமணமான ஒன்றரை மாதத்துக்கு பின், தம்பதி பைரிதேவரகொப்பாவில் இருப்பதை, போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை வரவழைத்தனர்.

விசாரித்த போது, சுஷ்மா கணவருடன் வாழ்வதில் உறுதியாக இருந்தார். அப்போது சுஷ்மாவின் தாயார், தனக்கு உடல் நலம் சரியில்லை. சில நாட்கள் தங்களுடன் இருந்துவிட்டு, கணவர் வீட்டுக்கு செல்லும்படி வேண்டினர். மகளும் சம்மதித்து பெற்றோருடன் சென்றார். ஆனால், அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பாமல், இரண்டு ஆண்டுகளாக தங்களுடன் வைத்துள்ளனர். கணவரை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.

மனைவிக்காக காத்திருந்த நிரஞ்சன், சமீபத்தில் பைரிதேவரகொப்பாவில் இருந்து, மீண்டும் ஹூப்பள்ளிக்கு வந்து, சதாசிவநகரில் வசிக்கிறார். இதையறிந்த சுஷ்மா, பெற்றோருக்கு தெரியாமல், நேற்று முன்தினம் கணவர் வீட்டுக்கு வந்தார்.

நேற்று காலை அவரை தேடி வந்த பெற்றோரும், சகோதரர்களும் சுஷ்மாவை தாக்கி, கோணிப்பையில் கட்டி வீட்டுக்கு துாக்கி சென்றனர். தடுக்க வந்த நிரஞ்சனை கொலை செய்வதாக மிரட்டினர். நிரஞ்சன் நவநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடந்ததை கூறி புகார் அளித்தார். அதன்பின் போலீசார், சுஷ்மாவின் பெற்றோரையும், நிரஞ்சனின் பெற்றோரையும், போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அறிவுரை கூறினர்.

அதன்பின் மகளை கணவருடன் அனுப்ப சம்மதித்தனர். நிரஞ்சன் மனைவியை அழைத்து கொண்டு சென்றுவிட்டார். 'இனி இவர்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டோம்' என, போலீசாரிடம் உறுதி அளித்தனர்.

Advertisement