சிறுவன் கடத்தல் வழக்கு; எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி., ஆஜராக உத்தரவு

சென்னை: திருவள்ளூர் அருகே சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட அந்த இளம்பெண்ணை மீட்பதற்காக, காதலனின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் புதிய பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு, திருவள்ளூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது, பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகிவிட்டதாகவும், தொடர்ந்து அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று அவசர வழக்காக நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "சிறுவன் கடத்தல் விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை. போலீசார் அவரைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க முயற்சித்து வருகின்றனர்," என்று பூவை ஜெகன்மூர்த்தி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் தாமோதரன் வாதிட்டதாவது: திருமணம் செய்து கெண்ட இளம்பெண்ணின் தந்தை வனராஜா மற்றும் முன்னாள் பெண் கான்ஸ்டபிள் மகேஷ்வரியின் அறிவுறுத்தலின் பேரில், ஏ.டி.ஜி.பி., மூலம் இந்தப் பிரச்னை பூவை ஜெகன்மூர்த்தியிடம் சென்றது. அதன் பிறகு, எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் இரு கார்களில் திருமணம் செய்து கொண்ட இளைஞரை கடத்துவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அவர் இல்லாததால், அவரது சகோதரனை கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் போலீசார் தேடுவதை அறிந்து, ஏ.டி.ஜி.பி.,யின் காரில் சிறுவனை கொண்டு சென்று இறக்கி விட்டுள்ளனர். அந்தக் காரில் வனராஜா மற்றும் மகேஷ்வரியும் இருந்துள்ளனர், என தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி வேல்முருகன், எம்.எல்.ஏ., பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் ஆகியோர் இன்று மதியம் 2.30 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். ஆஜராக தவறினால் இருவரையும் கைது செய்ய ஆணையிடப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.




மேலும்
-
போர் விமானத்தை விட்டு நகர மறுத்த பிரிட்டிஷ் பைலட்: திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் சம்பவம்!
-
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முன்னுரிமை: காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா
-
மும்பையை திக்குமுக்காட வைத்த கனமழை; ரயில், பஸ் சேவை முற்றிலும் முடக்கம்
-
ராகுல் சர்ச்சை பேச்சு வழக்கு ஜூலை 18 ல் விசாரணை: சம்பல் கோர்ட் முடிவு
-
டில்லியில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பு அருகே சம்பவம்; சாய்ந்து விழுந்த 100 அடி செல்போன் கோபுரம்
-
காசா உதவி மையத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழப்பு