வேகத்தடை அமைக்கக்கோரி மக்கள் சாலை மறியல்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், ஒன்தாம்படி பகுதியில் இருந்து ஆலாம்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம்படி பகுதி மேம்பாலத்தில் ஏறும் வாகனங்கள், ஆலாம்பாளையம் பகுதியில் இறங்கி, சாலையில் செல்கின்றன. அப்போது, ஆலாம்பாளையம் பகுதியில் இருந்து வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.


இந்நிலையில், நேற்று இரவு, 8:00 மணிக்கு ஆலாம்பாளையத்தில் இருந்து கார் ஒன்று வந்தது. அப்போது டூவீலர் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது, நிலை தடுமாறி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள், விபத்தை தடுக்கும் வகையில் ஆலாம்பாளையத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'இரண்டு நாளில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து வேகத்தடை அல்லது பேரிகாட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தனர். இதையடுத்து, சாலை மறியலை, பொது மக்கள் கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement