இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்; தேடுதல் வேட்டை தீவிரம்

ஸ்ரீஹரிகோட்டா; ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக விடப்பட்ட மிரட்டலை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்துள்ளது.



ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக அனாமதேய அழைப்பு போலீசாருக்குச் சென்றது. இந்த தொலைபேசி அழைப்பு இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும், திருப்பதி மாவட்ட போலீசாருக்கும் சென்றது.


இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் உடனடியாக ஆராய்ச்சி மையத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆராய்ச்சி மையத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், அலுவலர்கள் குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது.மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.


இது தவிர, கடலோர பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு படையினரும் தேடுதல வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டையில் எந்தவொரு வெடிகுண்டோ அல்லது வெடிபொருட்களோ எங்கும் சிக்கவில்லை.


இதையடுத்து, அது வெறும் புரளி என்று கூறிய போலீசார், மிரட்டல் அழைப்பு எங்கிருந்து வந்தது, இதை யார் செய்தது என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக கூறி உள்ளனர்.

Advertisement