பயணியை ஆபாசமாக பேசிய அரசு பஸ் கண்டக்டர்: போக்குவரத்துக் கழகம் சஸ்பெண்ட்

1

மதுரை: மதுரையில் பயணியை ஆபாசமாக திட்டிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



இதுபற்றிய விவரம் வருமாறு:


மதுரை நகரின் பல பகுதிகளில் ஏராளமான தாழ்தள பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த பஸ்களில் மாற்றுத் திறனாளிகளை முறையாக ஏற்றிச் செல்வதில்லை என டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது ஏராளமான புகார்கள் உள்ளன.


இந்நிலையில், மதுரை மாவட்ட எஸ்.பி., அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தக்கோரி கை நீட்டி உள்ளார். அதே நேரத்தில் பஸ் நிறுத்தம் அருகே இருந்த போக்குவரத்து சிக்னலில் பச்சை ஒளி விளக்கு எரியவே பஸ்சை அதன் டிரைவர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.


அப்போது இதை கவனித்த வாலிபர், மீண்டும் பஸ்சை நிறுத்துமாறு கைகாட்டி உள்ளார். இதைக் கண்ட டிரைவரும், கண்டக்டரும், அந்த வாலிபரை ஆபாசமாக திட்டி வசைபாடியுள்ளனர். ஒரு கட்டத்தில் சிக்னல் அருகே எதற்காக பஸ்சை நிறுத்த கோருகிறாய் என்று கூறிய படியே பஸ்சில் இருந்து கண்டக்டர் இறங்கி உள்ளார்.


பின்னர் நேராக பஸ்சை நிறுத்தக் கோரிய வாலிபரிடம் சென்று அவரை திட்டுகிறார். பதிலுக்கு வாலிபரும் ஏதோ சொல்ல, மீண்டும் அவரை கண்டக்டர் திட்டியபடியே பஸ்சில் ஏறுகிறார்.


இந்த வசைபாடல் சம்பவத்தை அங்குள்ள யாரோ ஒருவர் தமது செல்போனில் வீடியோ காட்சிகளாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டு உள்ளார். பயணி ஒருவரை பஸ் கண்டக்டர் பொறுப்பற்ற முறையில் பேசுவதா என்று கேள்விகள் எழுந்தன.


வீடியோ வைரல் ஆன நிலையில், அந்த குறிப்பிட்ட பஸ்சின் கண்டக்டர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. அனைத்து பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement