அஷ்வின் அணி மீது புகார் * பந்தை சேதப்படுத்தியதாக...

சேலம்: டி.என்.பி.எல்., தொடரில் அஷ்வின் அணியினர் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
சேலத்தில் கடந்த ஜூன் 14ல் நடந்த போட்டியில் திண்டுக்கல் அணி, மதுரை அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியினர் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மதுரை அணி தெரிவித்துள்ள புகாரில்,' திண்டுக்கல் அணியினர் ரசாயன பொருள் தடவிய துண்டை பயன்படுத்தி பந்தை தேய்த்து சேதப்படுத்தினர். இதனால் பந்தின் எடை அதிகமாக இருந்தது. அம்பயர்கள் பல முறை எச்சரித்த போதும் தொடர்ந்தது. 'பவர் பிளே' ஓவருக்குப் பின், பேட்டின் மீது பந்து பட்ட போது, வித்தியாசமான சப்தம் கேட்டது. அஷ்வின், திண்டுக்கல் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எல்., தொடரின் தலைமை செயல் அதிகாரி பிரசன்னா கண்ணன் கூறியது:
மழை காரணமாக மைதானம் ஈரமான நிலையில், பந்தை துடைக்க, டி.என்.பி.எல்., நிர்வாகம் சார்பில் துண்டு ('டவல்') கொடுக்கப்பட்டது. . போட்டியின் போது, பந்து குறித்து எவ்வித பிரச்னையும் எழவில்லை. சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் புகார் தெரிவிக்க வேண்டும். எனினும் மதுரை அணியின் புகாரை ஏற்றுக் கொள்கிறோம். இதுகுறித்த ஆதாரத்தை இன்று மதியம் 3:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் உண்மை உள்ளதா என விசாரிக்கப்படும். புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை எனத் தெரியவந்தால், மதுரை அணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement