பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது

நிக்கோசியா : பிரதமர் நரேந்திர மோடிக்கு, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான, 'கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மகாரியோஸ் 3' விருதை, அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார்.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, மேற்காசிய நாடான சைப்ரசுக்கு அவர் நேற்று முன்தினம் சென்றார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, தலைநகர் நிக்கோசியாவில் அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, இரு நாடுகளுக்கு இடையே ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

இதேபோல் கலாசார தொடர்புகளை விரிவுபடுத்துவதுடன், சுற்றுலா துறையின் வாயிலாக இரு நாடுகளை இணைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சைப்ரஸ் நாட்டின் 'கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மகாரியோஸ் 3' என்ற உயரிய விருதை, அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ், பிரதமர் மோடிக்கு அளித்து கவுரவித்தார்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:

சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதை எனக்கு வழங்கியதற்காக அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இது எனக்கு கிடைத்த மரியாதை அல்ல; 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த மரியாதை. இந்த விருதை இந்தியாவிற்கும், சைப்ரசுக்கும் இடையிலான நட்புறவுக்கு அர்ப்பணிக்கிறேன்.

இந்த விருது, இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நம் மக்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வலுப்படுத்தும்.

இந்தியா- - மத்திய கிழக்கு - -ஐரோப்பிய நாடுகள் இடையேயான பொருளாதார வழித்தடம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த வழித்தடம், அமைதியையும் செழிப்பையும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement