தந்தையின் சேமிப்பு ரூ.20 லட்சம் திருடி கார் வாங்க காதலனுக்கு கொடுத்த காதலி

கோயம்பேடு, பூந்தமல்லி அடுத்துள்ள தனியார் கல்லுாரி மாணவியின் பெற்றோர், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

என் மகள் மதுரவாயலில் உள்ள தனியார் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் படித்து வரும் திருத்தணியைச் சேர்ந்த புருஷோத்தமன், 18, என்பவர், என் மகளை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

பின், தனக்கு கார் வாங்க காசு வேண்டும் என, தெரிவித்துள்ளார். என் மகளிடம் இருந்து, 20 லட்சம் ரூபாய் பெற்று புது கார் வாங்கியுள்ளார்.

இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

போலீசாரின் விசாரணையில், 2024ம் ஆண்டு கல்லுாரியில் சேர்ந்த மாணவி, தன் வகுப்பில் படித்து வந்த புருஷோத்தமன் என்ற மாணவனுடன் நட்பாக பழகியுள்ளார்.

நாளடைவில் காதலாக மாறியுள்ளது. புருேஷாத்தமனின் செலவிற்காக அடிக்கடி மாணவி பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தான் கார் ஒன்று வாங்க உள்ளதாகவும், அதற்கு பணம் குறைவாக இருப்பதாகவும் மாணவியிடம் புருஷோத்தமன் பணம் கேட்டுள்ளார்.

அவரை நம்பிய மாணவி, மளிகைக்கடை நடத்தி வரும் தன் தந்தையின் சேமிப்பு பணத்தில் இருந்து 20 லட்சம் ரூபாய் எடுத்து புருஷோத்தமனிடம் கொடுத்து உள்ளார்.

அந்த பணத்தில் புருேஷாத்தமன் கார் வாங்கி, அந்த புதிய காரில் கல்லுாரிக்கும் வந்துள்ளார்.

கார் வாங்கிய பிறகு, புருஷோத்தமன் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில் தான் வீட்டில் பணம் காணாமல்போனது குறித்து தந்தை கேட்ட நிலையில், தன் காதலனுக்கு அந்த பணத்தை கொடுத்ததாக மாணவி கூறியுள்ளார்.

இதையடுத்து கோயம்பேடு போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து, கல்லுாரி மாணவன் புருஷோத்தமனிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement