சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பொறுப்பேற்பு

சென்னை,: தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து, இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.


அவருக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், நீதிபதி கே.சுரேந்தரை, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வரவேற்று பேசுகையில், ''கடந்த 2022ம் ஆண்டு தெலுங்கானா உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர், 22,622 வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.


நீதிபதியாக பொறுப்பேற்கும் முன், தில்சுக் நகர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகள், சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு வழக்குகளில், அரசு சிறப்பு பிளீடராக பணிபுரிந்துள்ளார்,'' என்றார்.


அதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், புதிதாக பொறுப்பேற்ற நீதிபதி சுரேந்தரை வரவேற்றுப் பேசினர்.


பின், ஏற்புரையாற்றிய நீதிபதி சுரேந்தர், ''அரசியல் சாசனத்திற்கும், நீதித்துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கி இருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில், கூடுதலாக கற்றுக்கொள்ளும் ஆவலுடன் வந்துள்ளேன். இடமாற்றம் என்பது புதிய துவக்கம்,'' என்றார்.


புதிதாக பொறுப்பேற்ற நீதிபதி சுரேந்தருடன் சேர்த்து, உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 16 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

Advertisement