'போட்டோ ஷூட்'டில் இருக்கும் கவனம் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை: பழனிசாமி

5

சென்னை : தி.மு.க., ஆட்சியில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:



ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், பா.ம.க., இளைஞரணி மாவட்டச் செயலர் சக்கரவர்த்தி, கடந்த 11ம் தேதி இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக, தி.மு.க., அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


ஆனால், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொல்லப்பட்டது, உடற்கூராய்வில் அம்பலமாகியுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் சென்ற தமிழகத்தை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது, தி.மு.க., அரசு.



இதே ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த தி.மு.க., கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்தபோதே, தமிழக அரசை எச்சரித்தேன்.


ஆனால், துப்பாக்கி கலாசாரத்தை ஒடுக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 'ரோடு ஷோ, போட்டோ ஷூட்'டில் இருக்கும் கவனம், சட்டம் - ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களை பாதுகாப்பதிலோ, பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு துளியும் இல்லை.


சக்கரவர்த்தி கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும், கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement