முருக பக்தர்கள் மாநாட்டை மதுரைக்கு வந்து பார்க்கட்டும் சேகர்பாபுவுக்கு ராஜா பதில்

திருச்சி : மருது பாண்டியர் ஜம்புத்தீவு பிரகடனம் செய்த நினைவு நாள் நிகழ்ச்சி, திருச்சி மலைக்கோட்டையில், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து முன்னணி சார்பில், மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நடந்தது. அதில், ஜம்புத்தீவு பிரகடனம் ஓட்டப்பட்ட இடத்தில் மருது சகோதரர்கள் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., மூத்த தலைவர் ராஜா அளித்த பேட்டி:



திராவிடம் பற்றி பாடம் கற்பிப்பவர்கள், தமிழக அரசியல் வரலாறு பற்றி சொல்லிக் கொடுப்பதில்லை. இங்கு ஹிந்து விரோத அரசு இருப்பதால், ஜம்பு பிரகடனத்தை நினைவு படுத்தும் விதமாக, திருச்சியில் நிகழ்ச்சி நடத்த பல்வேறு கெடுபிடிகள் செய்தனர்.

நாட்டிற்கு விரோதமாக செயல்படுவதோடு, நாட்டிற்கு எதிராக பிரிவினைவாதம் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் பேரணிக்கு, எவ்வித சிக்கலும் இன்றி, தமிழக அரசு அனுமதி கொடுத்துஇருக்கிறது.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், 'தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பற்றி பேசக்கூடாது' எனக் கூறி, மாநாட்டுக்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தேசபக்த நிகழ்ச்சி நடத்துவதற்கு, அனுமதி கொடுக்க மறுப்பது நியாமில்லாத செயல். தேச விரோதம், ஹிந்து விரோதம் இரண்டுமே ஒன்று தான்.

முதன் முதலில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளக்கூடாது எனக் கூறியவர் ஹிந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன். அன்று அவர் சொன்னபோது, எல்லோரும் அதை எதிர்த்தனர். இன்று, முதல்வர் ஸ்டாலின் அதையே சொல்கிறார். எப்போதுமே ஸ்டாலின் பின் புத்திக்காரர் தான். மத்திய அரசால் விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்றால், தமிழகம் கேட்கும் எல்லாமே மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும்; நிதியும் கிடைக்கும்.

கள்ளுக்கு அனுமதி வேண்டும் என சீமான் போராடுகிறார். தமிழக பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையிலும் அதுவே உள்ளது. அந்த வகையில், இந்த விஷயத்தில் சீமானுக்கு எங்கள் ஆதரவு உண்டு.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கூட்டம் வராது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். வேண்டுமானால், அன்றைய தினம் அவரே மதுரைக்கு வந்து பார்க்கட்டும்.

இவ்வாறு ராஜா கூறினார்.

Advertisement