நீலகிரி, கோவையில் இன்று கனமழை

சென்னை : 'நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:



நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில், 29 செ.மீ., மழை பெய்துள்ளது.


இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், 18; நீலகிரி மாவட்டம் மேல்பவானி, 17; நீலகிரி மாவட்டம் பந்தலுார் தாலுகா அலுவலகம், 13; கோவை மாவட்டம் சோலையார், சின்கோனாவில் தலா, 12; கோவை மாவட்டம் வால்பாறை, உபாசியில் தலா, 11 செ.மீ., மழை பெய்துள்ளது.



வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.


இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி, மின்னலுடன், மணிக்கு 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டம் ஆகிய இடங்களில் இன்று, கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில், ஜூன், 22 வரை, மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement