துணை முதல்வர் உதயநிதி இன்று சிவகங்கை வருகையால் தீராத பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்குடி மாநகராட்சியாகும். சிவகங்கை நகராட்சியாக இருப்பதோடு மாவட்ட தலைநகராக உள்ளது.

நகரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 27 வார்டுகள் உள்ளன. தற்போது நகர் விரிவாக்கம் செய்யப்பட்டு வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஊராட்சிகள் சிவகங்கை நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நகரில் தினசரி 13 டன் குப்பை சேகரமாகிறது.முன்பு சேகரமாகும் குப்பை சுந்தரநடப்பு பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கிடங்கில் கொட்டப்பட்டது.

மக்கள் குடியிருப்புஅங்கு விரிவாக்கம்ஆனதன் காரணமாக அங்கு குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிவகங்கை நகரில் சேகரமாகும் குப்பை கொட்ட இடமில்லை.

மாவட்ட நிர்வாகத்திடம் குப்பை கொட்ட இடம் ஒதுக்கி தருமாறு நகராட்சி கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியும் இன்று வரை குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை

சேகரமாகும் குப்பை மானாமதுரை சாலை தெற்கு மயானம்,காளவாசல், மருதுபாண்டியர் நகர் உள்ளிட்ட இடங்களில் கொட்டி நுண்உரம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் சேகரமாகும் குப்பை மருத்துவக்கல்லுாரி அருகே உள்ள காலியிடத்தில் கொட்டி தீ வைப்பதால் அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நகர் முழுவதும் துர்நாற்றம் வீசப்படுகிறது.

சிவகங்கையில் மட்டுமல்லாது தேவகோட்டை, திருப்புவனம், திருப்புத்துார் ஆகிய இடங்களிலும்குப்பை கொட்ட இடமில்லாமல் மாவட்டமே துர்நாற்றத்தில் தவிக்கிறது.

காட்சி பொருளானசந்தை, பஸ் ஸ்டாண்ட்



சிவகங்கை நகராட்சி சார்பில் தினசரி சந்தை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.49 கோடியில் 100 கடைகள் கட்ட கட்டுமான பணி நடந்தது. வாகனம் நிறுத்த இடப்பற்றாக்குறை காரணமாக தற்போது 90 கடைகள் கட்டப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைகளை பிப்.6,18, மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் ஏலம் வைப்புத்தொகை அதிகமாக இருப்பதாக கூறி வியாபாரிகள் யாரும் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ரூ.3.46 கோடியில் கட்டப்பட்டு யாரும் ஏலம் எடுக்க வராததால் சந்தை வெறும் காட்சிபொருளாக மாறி நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

செயல்படாத வணிக வளாகம்



இதேபோல் சிவகங்கை பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் விரிவாக்கப்பணி ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்சில் தொடங்கி 18 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தும் கடைகளுக்கான வைப்பு தொகை, யாருக்கு இடம் ஒதுக்குவது என்ற பிரச்னையில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் கடைகள் ஏலம் விடப்படாமல் இழுபறியில் உள்ளது.

நர்சிங் கல்லுாரி வருமா



சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை 2012ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இக்கல்லுாரி அமைந்து 13 ஆண்டுகளாகிறது. மருத்துவ கல்லுாரி கட்டுமான பணியின் போதே பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரிக்கான வகுப்பறை, மாணவிகள் விடுதி கட்டடம் கட்டப்பட்டது.

ஆனால் இன்று வரை பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரி துவக்கப்படவில்லை. அதேபோல் குழந்தைகள்தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டியும் கட்டடத்திற்கு பிளான் அப்ரூவல் வழங்கப்படாததால் கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.

சிவகங்கைக்கு இன்று ஆய்வுக்கு வரும் துணை முதல்வர் உதயநிதி சிவகங்கையில் தீராத பிரச்னைகளான குப்பை பிரச்னை, திறக்கப்படாத கட்டடங்கள், பயன்பாட்டிற்கு வராத குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடம், நர்சிங் கல்லுாரி உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement