கட்டடத்தின் தரத்திலும், ஆயுளிலும்  எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் நீரின் பி.எச்., அளவு

கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரின் பி.எச்., அளவானது, 6.5 முதல், 8.5 வரை இருக்கலாம் என்பதை, IS:3025 வாயிலாக இந்திய தரக்கட்டுப்பாட்டு மையம்நிர்ணயித்துள்ளது.சில இடங்களில் நிலத்தடி நீரானது, இந்த அளவை விட மாறுபடுகிறது.

பி.எச்., அளவு அதிகரித்தால், கலவை அல்லது கற்காரையானது இறுகுவதில் தாமதம் ஏற்படலாம். இதனால், ஆரம்ப நாட்களில் தேவையான வலிமை அடைந்து அல்லது சில நேரங்களில் நீண்ட காலத்தில் கூட, முழுமையான வலிமை அடையாமல் போகலாம். அது நமது கட்டடத்துக்கு மிகவும் ஆபத்தாக முடியும்.

அகில இந்திய கட்டுனர் சங்க கோவை மைய கவுரவ செயலாளர் ரங்கநாதன் கூறியதாவது...

இந்த நீரை பயன்படுத்தி கட்டுமானம் செய்யும்போது, கற்காரையின் மேற்பரப்பில் வெண்மை நீராவி படிவதற்கான வாய்ப்பு அதிகம். கட்டடத்தின் அழகுத்தன்மையையும் பாதிக்கும்.

பி.எச்., அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில்கற்காரையின் தரத்திலும், வலிமையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

கற்காரையில் உள்ள மணல் மற்றும் ஜல்லி கற்களுடன், சரியான பிணைப்பை ஏற்படுத்த முடியாமல் செய்யும். ஆர்.சி.சி.,யில் உள்ள கம்பிகளில் துருப்பிடிக்க, அதிக வாய்ப்பு ஏற்படுவதுடன், கட்டடத்தின்ஆயுள் காலத்தை பாதிக்கும்.

குளோரைடுகள் அளவானது, 500 மி.கி.,/l வரை இருக்கும் பட்சத்தில் அது ஆர்.சி.சி.,யில்(கம்பிகளை கட்டி) பயன்படுத்தலாம். 2,000 மி.கி.,/l வரை இருக்கும் பட்சத்தில் சுவர் பூச்சு மற்றும் பி.சி.சி.,(தரைகளுக்கு) பயன்படுத்தலாம்.

500 மி.கி.,/lஐ விட அதிகமாக இருப்பின், இரும்புக் கம்பிகளை விரைவாக துருப்பிடிக்க செய்கின்றன.2,000 மி.கி.,/lஐ விட அதிகமாக இருப்பின், பிளாஸ்டரிங் மற்றும் பூச்சுப் பணிகளில் குளோரைடு அதிகமாக இருந்தால், சுவர்களில் வெள்ளை உப்பு தோன்றும்.

அதிகமான குளோரைடு கொண்ட நீர், கட்டுமானத்தில் பயன்படுத்துவது கட்டடத்திற்கும், ஆயுள் காலத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். சல்பேட் அளவானது, 400 மி.கி.,/l வரை பயன்படுத்தலாம். அதைவிட அதிகமாக இருப்பின், கான்கிரீட் வெடிப்பு மற்றும் உரிதல் ஏற்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement