இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!

12


தெஹ்ரான்: ஈரான் வைத்திருக்கும் யுரேனியம் இருப்பு அடிப்படையில், அந்த நாடு இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் இருப்பதாக கூறி, அந்த நாட்டின் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. தங்கள் நாட்டை பரம எதிரியாக கருதும் ஈரான், அணுகுண்டு தயாரித்து விட்டால், அது தங்களுக்கு பேராபத்தாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்துகிறது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதலில் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரானிடம் இருக்கும் யுரேனியம், எத்தனை நாட்களில் அந்த நாடு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.



ஈரான் இடம் தற்போதுள்ள மேம்படுத்தப்பட்ட யுரேனியத்தை கொண்டு இரண்டரை நாட்களில் ஒரு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும். 11 நாட்களில் ஐந்து அணுகுண்டுகளை தயாரித்து விடலாம். ஒரு மாத கால அவகாசத்தில் 11 அணுகுண்டுகளை ஈரான் தயார் செய்து விட முடியும். மூன்று மாத காலத்தில் 19 அணுகுண்டுகளையும், ஐந்து மாத காலத்தில் 22 அணுகுண்டுகளையும் அந்த நாடு தயார் செய்து விட முடியும்.


அந்த அளவுக்கு அந்த நாட்டிடம் தொழில் நுட்பமும், மேம்படுத்தப்பட்ட யுரேனியமும் இருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி உறுதியான தகவல்கள் கிடைத்த நிலையில் தான் இஸ்ரேல் தாக்குதலை துவங்கி உள்ளது. எனினும், ஈரான் ஒருமுறை கூட தான் அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கத்துடன் யுரேனியம் மேம்படுத்துவதாக தெரிவிக்கவில்லை.


அமைதி நோக்கத்துக்காகவே யுரேனியத்தை மேம்படுத்துவதாக ஈரான் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement