இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு; ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்; ஜி 7 மாநாட்டில் தீர்மானம்

27

கன்னாஸ்கிஸ்: இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ளும் அனைத்து உரிமையும் உண்டு; பிரச்னைக்கு முக்கிய மூல காரணம் ஈரான் நாடு தான் என்று ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



ஈரானின் அணுசக்தி திட்டத்தை எதிர்த்து அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடர்ந்துள்ளது. இரு நாடுகள் இடையேயான தாக்குதல்களின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான், இஸ்ரேல் நாடுகளின் மோதல் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளன.


இந் நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கி உள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறி உள்ளார்.
ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;


இருநாடுகளும் சந்தித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபர், இரு நாடுகளிடமும் ஒரு திட்டத்தை முன் வைத்துள்ளார். அதன் மூலம் போர் நிறுத்தம் செய்து கொள்வதற்கான பரந்துபட்ட விவாதங்கள் தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதை இருநாடுகளும் பின்பற்றுமா என்று நாம் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


ஜி 7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விபரம்: இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமையும் உண்டு. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கான எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அப்பாவி பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதும் மிகவும் முக்கியமானது.


பயங்கரவாதம் மற்றும் பிராந்திய அமைதியின்மைக்கு முக்கிய மூல காரணமாக ஈரான் உள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்பதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களால் முதலில் தயார் செய்யப்பட்ட தீர்மானத்தை, அதில் இருந்த சில வாசகங்களால் அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்தார். வாசகங்களை மாற்றிய நிலையில், இறுதித் தீர்மானத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டார் என மாநாட்டு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement