மங்களூருவில் ஒரு மழைக்கே தாங்காத மேம்பாலம்; திறப்பு விழா கண்ட 15 நாட்களில் கசிவு

3

மங்களூரு: மங்களூருவில் திறக்கப்பட்டு 15 நாட்களே ஆன மேம்பாலம், பலத்த மழையால் சேதம் அடைந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. பெங்களூரு, மைசூரு, மங்களூரு என மாநிலத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. தட்சிண கன்னடா, ஷிவமோகா, குடகு, சிக்கமகளூரு பகுதிகளையும் மழை விட்டு வைக்கவில்லை.


தொடர் மழை காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்தது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடியதால் போக்குவரத்தும் முடங்கியது.


இந் நிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மங்களூருவில் உள்ள மேம்பாலம் மழையால் பழுதாகி உள்ளது, பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காகவும், போக்குவரத்துக்காகவும் திறக்கப்பட்டு 15 நாட்கள் மட்டுமே ஆகிறது.


பாலத்தின் மேல் பகுதியில் இருந்து மழைநீர் கசிந்து, பல அடி உயரத்தில் இருந்து பொத்துக் கொண்டு நீர் வீழ்ச்சியாக கொட்டுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் மழைநீர் அருவியாக மாறி, பாலத்தின் அடியில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார் ஒன்றின் மீது விழுகிறது.


வீடியோ வைரலான நிலையில், மேம்பாலத்தின் கட்டுமான உறுதித் தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது. பாலத்தின் தரம் மோசமாக இருப்பதை இந்த பாலம் கண் முன்னே நிறுத்துவதாகவும், கட்டுமான ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் அதன் உறுதித்தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

Advertisement