மின்கம்பத்தை மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய செயற்பொறியாளர் கைது

கோவை: நிலத்தின் நடுவில் இருந்த மின்கம்பத்தை, ஓரமாக மாற்றித் தருவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளரை கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தைசேர்ந்தவர் செந்தில்பிரபு(36).மென்பொருள் பொறியாளர். தந்தை கருப்பசாமி. இவருக்கு சொந்தமாக கோவை மாவட்டம் நீலம்பூர் கிராமம் முதலிபாளையம் பகுதியில் 99 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவே மின்கம்பம் இருந்தது.
இதனையறிந்த செந்தில்குமார், கடந்த மே மாதம் குரும்பபாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை அணுகி, நிலத்தின் நடுவில் இருக்கும் மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்தார். நிலத்தை மாற்றுவதற்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலவாகும் என்பதால், இறுதி முடிவை செயற் பொறியாளர் தான் எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜனை(57) கடந்த 09ம் தேதி அணுகிய செந்தில்குமார் நிலத்தை மாற்ற அனுமதி கோரினார். தொடர்ந்து கருப்பசாமியை தொடர்பு கொண்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றுவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.
நேற்று அதிகாரிகளை செந்தில்குமாரும், கருப்பசாமியும் சந்தித்தனர். அப்போது இன்று வந்து லஞ்சப்பணத்தை தரும்படி கேட்டனர்.இது குறித்து இருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர்.
அவர்கள் அறிவுரைப்படி, இன்று அவர்கள் சோமனூர் சென்று, செயற்பொறியாளர் சபரிராஜனை சந்தித்தனர். அப்போது இடமாற்றம் குறித்து கேட்டனர். அதற்கு ஒரு வாரத்தில் மின்கம்பத்தை மாற்றுவதாக சபரிராஜன் உறுதிஅளித்தார். இதனையடுத்து இருவரும் ரூ.20 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தனர் அதனை வாங்கி மேஜையில் வைத்தார்.
பிறகு, தந்தையும், மகனும் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த போது சபரிராஜன் லஞ்சம் வாங்கியது உறுதியானது. அவரிடம் இருந்து லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சபரி ராஜன் கைது செய்யப்பட்டார்.





