கங்கையம்மன் ஜாத்திரை விழா கோலாகலம்

திருத்தணி:திருத்தணி அடுத்த நீலகண்டாபுரம் கிராமத்தில் கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு சக்தி அம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, மாலையில் கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு களிமண்ணால் செய்த கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement