பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்துவங்கியாச்சு 'கவனிப்பு டிரான்ஸ்பர்' அறிவிப்பு தாமதமாகும் பின்னணி என்ன

மதுரை: ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு தாமதமாகி வரும் நிலையில் மதுரை உட்பட பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் சிலர் 'நிர்வாக காரணம்' என்ற பெயரில் மறைமுகமாக மாறுதல் பெற்று வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறையில் இந்தாண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கல்வித்துறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் இருந்தும், ஏதோ காரணத்திற்காக பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு தாமதமாகிறது. இதனால் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் கல்வி இயக்குநர் கண்ணப்பனை சந்தித்து, ஜூனிற்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கிடையே மதுரை உட்பட சில தென் மாவட்டங்களில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் (பி.ஜி.,) பணியிடங்களை குறிவைத்து அரசியல்வாதிகள், அதிகாரிகள் சிபாரிசுடன் ஆசிரியர்கள் சிலர் மறைமுகமாக உத்தரவு பெற்று வருகின்றனர்.

இதனால் 'கலந்தாய்வில் மாவட்டத்திற்குள் காலியிடம் இருக்கும். அதை சீனியாரிட்டி அடிப்படையில் பெற்று விடலாம்' என நம்பிய ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கலந்தாய்வு நடத்த கல்வி அதிகாரிகள் தயாராக உள்ள நிலையில்,

அமைச்சர் தரப்பில் இருந்து அதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தியில் உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் ராஜசேகர் கூறியதாவது: ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை போன்ற சூழலில் தான் 'நிர்வாக காரணம்' என்ற பெயரில் மாற்றம் செய்யப்படுவர். விரைவில் பொதுக் கலந்தாய்வு அறிவிக்கவுள்ள நிலையில், மதுரை உட்பட மாவட்டங்களில் பி.ஜி., ஆசிரியர்கள் சிலர் 'நிர்வாக காரணம்' என்ற பெயரில் மாறுதல் பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கை ஊழலுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற 'கவனிப்பு' மாறுதலால் தகுதியுள்ளவர்களுக்கு கலந்தாய்வில் உரிய காலியிடம் கிடைக்காத சூழலும் ஏற்படும். மாவட்டம் வாரியாக ஆசிரியர்கள் காலியிடங்கள் விபரம் சி.இ.ஓ., அலுவலக தகவல் பலகையில் வெளிப்படையாக ஒட்டிவைக்க வேண்டும் என்றனர்.

Advertisement