மாணவ, மாணவியரை ஆபாசமாக படமெடுத்த 2 பேர் சிக்கினர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராமத்தினர்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா உத்தப்பநாயக்கனுார் அருகே ஒரு கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரை ஆடைகளை கழற்றும்படி கூறி ஆபாசமாக படமெடுத்த 2 பேரை பிடித்து கிராமத்தினர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளியில் படிக்கும் 6 முதல் 9 வயதுள்ள 5 மாணவியர், 2 மாணவர்கள் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பினர். வழியில் டூவீலருடன் நின்ற மூன்று பேர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களை மிரட்டி ஆடைகளை கழற்றும்படி கூறி தங்களிடமிருந்த அலைபேசியில் ஆபாசமாக மூவரும் படம் எடுத்து விட்டு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு சென்ற மாணவ, மாணவியர் தங்களை மூவர் மிரட்டி ஆபாசமாக படம் எடுத்ததாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இத்தகவல் அறிந்து கிராமத்தினர் திரண்டு சென்று டூவீலர்களில் சிறுவர்கள் அடையாளம் காட்டியவர்களை பிடிக்க முயன்றனர். டூவீலர்களில் தப்பிக்க முயன்றவர்களை தடுத்து பிடித்து கிராமத்தினர் விசாரித்ததில் லிங்கப்பநாயக்கனூர் அலெக்ஸ்பாண்டி 42, பழனி 40, என தெரிந்தது. அவர்களுடன் அலைபேசி வைத்திருந்த அதே ஊரைச் சேர்ந்த ரவி என்பவர் தப்பி விட்டார்.

பிடிபட்ட இருவரையும் உத்தப்பநாயக்கனூர் போலீசில் ஒப்படைத்தனர் கிராமத்தினர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் தப்பிய ரவியை தேடி வருகின்றனர்.

ஆபாச விவகாரம் தெரிந்து கிராமத்தினர் போலீஸ் ஸ்டேஷன் முன் அதிகளவில் திரண்டு பல மணி நேரம் நின்றனர்.

Advertisement