வருவாய்த்துறையினரின் மனக்குறைதான் என்ன ஜூன் 25 ல் ஒட்டுமொத்த விடுப்பு

மதுரை: தமிழக வருவாய்த்துறைக்கென உள்ள பிரதான கோரிக்கைளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அலுவலர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதற்காக ஜூன் 25ல் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட உள்ளனர்.

வருவாய்த்துறையில் கள அலுவலர்களாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. கனிமவள பாதுகாப்பு, அரிசி கடத்தல் தடுப்பு, ஆக்கிரமிப்பு அகற்றல் பணிகளின் போது பாதுகாப்பின்மை உள்ளது. மருத்துவத்துறையில் டாக்டர்களுக்கு 2008ல்பணிபாதுகாப்பு சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. அதுபோல வருவாய்த்துறைத் துறையினரை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்பது முதன்மை கோரிக்கை.

இத்துறையில் 2 ஆண்டுகளாக கருணை அடிப்படையில் பணி நியமனம் இல்லை. காலியிடங்களில் 25 சதவீதம் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வழங்க வேண்டும் என்று இருந்தது. இதனை 5 சதவீதமாக குறைத்தால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு கருணை பணிநியமனம் வழங்க முடியாது. இதனால் காத்திருப்போர் பட்டியல் மேலும் நீண்டுவிடும். எனவே முன்புபோல 25 சதவீதம் வழங்க வேண்டும்.

வருவாய்த்துறையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அலுவலக உதவியாளர் காலியிடங்கள் உள்ளன. 2 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இன்றி அலுவலர்கள் திண்டாடுகின்றனர். இதனால் வழக்கமானது முதல் தேர்தல் சிறப்பு பணிகள் வரை எதனையும் மேற்கொள்ள முடியாது. இச்சிரமத்தை கணக்கில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எம்.பி.முருகையன் கூறியதாவது: இத்துறையினர் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். இதனால் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், பொதுமக்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி சான்றிதழ் வழங்குகிறோம். எங்களை அங்கீகரிக்கும் வகையில் வருவாய்த்துறை தினத்தை அறிவிக்க வேண்டும்.

இதற்காக அரசாணை வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை கூட்டமைப்பு சார்பில் ஜூன் 25 ல் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்க உள்ளோம். அன்று மாவட்ட தலைநகரங்களில் தர்ணா, ஊர்வலம் நடைபெறும். முதல்வர் தலையிட்டு பேச்சு வார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

Advertisement