வலு அடைந்தது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

1


புதுடில்லி: தென்மேற்கு வங்கதேசம், அதை ஒட்டிய மேற்கு வங்கத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அப்பகுதியில் நேற்று காலை, புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. தென்மேற்கு வங்க தேசம், மேற்கு வங்கம் ஒட்டி நிலவி வந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.



நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழக தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில், இடையிடையே, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement