'ஹெபடிட்டிஸ் பி' தடுப்பூசி தட்டுப்பாடால் அவதி

மதுரை: ஐந்து மாதங்களாக தனியார் மருத்துவமனைகளில் 'ஹெபடிட்டிஸ் பி' தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் தற்போது அரசு மருத்துவமனைகளிலும் போதிய இருப்பு இல்லாததால் பச்சிளம் குழந்தைகள், மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுப்பதற்காக பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்த தினத்தில் முதல் டோஸ், ஒருமாதம் கழித்து 2வது கூட்டு மருந்து டோஸ், 6 மாதம் கழித்து 3வது கூட்டுமருந்து டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மருத்துவமனை, மருத்துவம் சார்ந்த பணியாற்றுபவர்கள், ரத்தம் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இதேபோல 3 டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். அதன் பின் வீரியத்தை பொறுத்து ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் 3 டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.

'ஹெபடிட்டிஸ் பி' தடுப்பூசி உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டதால் ஐந்து மாதங்களாக தனியார் மருத்துவமனைகளுக்கு கிடைக்கவில்லை. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு தீர்ந்த நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவமனைகள் கேட்கும் எண்ணிக்கையில் பாதியளவே வழங்கப்படுகிறது. ஒரு வயல் (பாட்டில்) எடுத்தால் குறைந்தது 20 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்பதால் 20 குழந்தைகள் அல்லது 20 பணியாளர்கள் சேர்ந்தால் மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்த முடிகிறது.

இதனால் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை பட்டியலில் குறிப்பிட்டுள்ள நாட்களில் தடுப்பூசி செலுத்த முடியவில்லை. தடுப்பூசி உற்பத்தியை தொய்வின்றி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தால் தான் எதிர்கால சந்ததியினருக்கும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கும் மஞ்சள்காமாலை நோய் வராமல் தடுக்க முடியும்.

Advertisement