பள்ளி திறந்தும் புத்தகம் வரல.. ஆசிரியர் கையேடும் இல்லை... எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஏக்கம்

மதுரை: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறந்து இரண்டு வாரங்களை தாண்டியும் இதுவரை எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான பயிற்சி புத்தகங்கள், கையேடுகள் வழங்கப்படாததால் இத்திட்டம் இந்தாண்டு கேள்விக்குறியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு பின் தொடக்க கல்வியில் ஏற்பட்ட கற்றல் பாதிப்பை சரிசெய்யும் வகையில் அரசு, உதவிபெறும் 1, 2, 3ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 26 லட்சம் மாணவர்களை மூன்று வகையாக (அரும்பு, மொட்டு, மலர்) பிரித்து செயல்வழிக் கற்றல் பயிற்சி அளித்து எழுத்தறிவு, எண்ணறிவு மேம்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2025 க்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் கற்றல் கற்பித்தலை மேம்படுத்த தற்போது பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் வாரியாக பயிற்சி புத்தகங்கள், ஆசிரியர்களுக்கு கையேடுகள் வழங்கப்படும். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறந்து வழக்கமான பாடப்புத்தகம் வழங்கும் போதே இவற்றையும் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்தாண்டு நேற்று வரை பயிற்சி புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆசிரியர்கள் வழக்கமான பாடங்களுடன் இப்பயிற்சி புத்தகத்தின் பாடத்தையும் கற்பிக்க வேண்டும். அதை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கான கையேடும் வழங்கப்படும். தாமதமாக வழங்கப்பட்டால் வழக்கமான பாடங்களுடன் இவற்றையும் கற்பிப்பது பெரும் சவாலாக இருக்கும். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டும் பயிற்சி புத்தகங்கள் இந்தாண்டு வழங்காததால் இத்திட்டம் முடக்கப்படுகிறதா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.இனியாவது விரைவில் வழங்க திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement