சிறுமி பாலியல் பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

ஈரோடு, பத்தாம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கூலி
தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், அரச்சலுார் நாகராஜபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 36. அரச்சலுாரில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிகிறார். இவருடன் வேலை பார்த்து வந்தவருடன் ஏற்பட்ட பழக்கத்தால், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது நண்பரின் மகளான, 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுமிக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்து, பேசி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக மூன்று ஆண்டுகளாக ஆசை வார்த்தை கூறி, 2020 நவ., 15ல் சிறுமியை அழைத்து சென்று, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நண்பரின் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதே மாதம், 20ல் சிறுமியை திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
பெற்றோர் அளித்த புகார்படி, அரச்சலுார் போலீசார் சிறுமியை கண்டுபிடித்து மீட்டனர். பின், சிறுமி அளித்த தகவலின்பேரில், மூர்த்தி மீது கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி சொர்ணகுமார் தீர்ப்பளித்தார்.
அதில், மூர்த்திக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 35 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கிட, தமிழக அரசுக்கு நீதிபதி சொர்ணகுமார் பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

Advertisement