முட்புதர்களில் உள்ள பாம்பு வீடுகளுக்குள் வருவதால் அச்சம் போடி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

போடி: 'தெருக்களில் காலி இடங்களில் உள்ள முட்புதர்களில் வசிக்கும் பாம்புகள் வீடுகளுக்குள் வருவதால் மக்கள் அச்சம் அடைகின்றனர்.

முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என போடி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் வலியுறுத்தினர். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கி முட்புதர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அலுவலர் தெரிவித்தார்.

போடி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. கமிஷனர் பார்கவி, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, பொறியாளர் குணசேகர், மேலாளர் முனிராஜ், சுகாதார அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

பெருமாள், (இ.கம்யூ.,): குடிநீர் புதிய பைப் லைன் அமைக்கும் பணிகள் முடிந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும்.

பொறியாளர் : பைப் லைன் அமைக்கும் பணி முடிந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மகேஸ்வரன் (தி.மு.க.,) : பல தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்காததால் தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

கமிஷனர்: விடுபட்ட நபர்களுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது.

பொறியாளர் : பாதாள சாக்கடை மூலம் தினமும் 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியே செல்கிறது. இணைப்பு பெறாத நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன.

சங்கர் (தி.மு.க.,) : 29 , 30 வது வார்டுகளில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பூட்டி உள்ளது. எப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரும்.

பொறியாளர் : மராமத்து பணிகள் முடிந்த பின் பயன்பாட்டிற்கு வரும்.

ராஜா, தி.மு.க., : பல ஆண்டுகளாக போடி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மழை, வெயிலால் மக்கள் சிரமம் அடைகின்றனர். நிழற்குடை அமைக்க வேண்டும்.

கலையரசி : போடியில் தினசரி மார்க்கெட், பரமசிவன் கோயில் ரோட்டில் சாக்கடை, குப்பை தேங்கி உள்ளது. 'மாஸ் கிளினிங்' செய்திட வேண்டும்.

சுகாதார அலுவலர்: இந்தப் பகுதியில் பகலில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இரவில் மாஸ் கிளீனிங் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

மணிகண்டன், சித்ராதேவி, (பா.ஜ.,): 33 வார்டுகளிலும் சாக்கடை தூர்வாராமலும், குப்பை அகற்றாததால் நகரில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதை கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம் என கூறி வெளியேறினர்.

கூட்டத்தில் 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement