பெயின்ட் அடிக்க வந்தவருடன் ஓடிய மகள்; 2 பேத்திகளை கொன்று பாட்டிகள் தற்கொலை

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே, இரு பேத்திகளை கொலை செய்து, இரு பாட்டிகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இடையகோட்டை அருகே சின்ன குளிப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா, 28. இவருக்கும் கரூர் சவுந்தராபுரத்தை சேர்ந்த பிரபாகரனுக்கும், 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏழு மற்றும் ஐந்து வயதில் மகள்கள் இருந்தனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒரு மாதமாக சின்னகுளிப்பட்டியில் உள்ள தாய் காளீஸ்வரி, 45, வீட்டில் பவித்ரா குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டிற்கு பெயின்ட் அடிக்க வந்த பள்ளப்பட்டியை சேர்ந்த ஒருவருடன் பவித்ராவுக்கு தொடர்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மாலை அவருடன் வீட்டை விட்டு மாயமானார். இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட காளீஸ்வரி மற்றும் காளீஸ்வரியின் தாய் செல்லம்மாள், 65, நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்த பேத்திகள் இருவரையும் துாக்கிலிட்டு கொலை செய்தனர். பின், தாங்களும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இடையகோட்டை போலீசார் நால்வர் உடல்களையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement