ஊராட்சிகளில் ஆன்லைன் வரிவசூல் 78 நாட்களுக்கு பின் துவக்கம்

பெரியகுளம்: ஊராட்சிகளில் நடப்பாண்டிற்கான வரி வசூல் இணையதளம் 78 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் செயல்பட துவங்கியது.

மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் ஆண்டுக்கு ஒரு முறை வரி வசூலிக்கப்படுகிறது. 2022 ஏப் 1 முதல் ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்.1 ல் வரி வசூல் துவங்கும். ஆன்லைனில் வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி உட்பட 6 வரி இனங்கள் செலுத்தப்படுகிறது.

ஊராட்சிகளில் 2024--25க்கு பெரும்பாலான ஊராட்சிகளில் நூறு சதவீதம் வசூலும், சில ஊராட்சிகளில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரி வசூலாகியுள்ளது. நடப்பாண்டில் 2025- -26க்கான வரி வசூல் ஏப் 1 முதல் வசூல் துவங்கும்.

இந்நிலையில் ஏப்.1 முதல் ஆன்லைனில் வரி செலுத்துவதற்கான இணையதளம் முடங்கியது. இதனால் மாவட்டத்தில் வைகாசியில் வீடு கிரகப்பிரவேசம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டடங்களுக்கு புதிதாக வீட்டு வரி செலுத்தமுடியவில்லை. வீட்டு வரி செலுத்தாததால் வீடுகளுக்கு தற்காலிகமாக

பெறப்பட்ட வணிக மின் இணைப்பு 'டேரிப் 5ல்' பெறப்பட்ட இணைப்பையே தொடர்ந்து பயன்படுத்தினர்.

வீட்டு வரி ரசீது இருந்தால்தான் வீடுகளுக்கான மின் இணைப்பு 'டேரிப் 1ல்' இணைப்பு பெற முடியும். வரி வசூலிக்காததால் ஊராட்சிகளில் நிதி நெருக்கடியால் அடிப்படை வசதி மேம்பாட்டு பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 78 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் (ஜூன் 18) வரி செலுத்துவதற்கான இணையதளம் துவங்கி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.-

Advertisement