'தி.மு.க., அரசு மீது அமைச்சரே விமர்சனம் முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன?' அன்புமணி கேள்வி

1

சென்னை : 'தி.மு.க., அரசு மீதான அமைச்சர் தியாகராஜனின் விமர்சனத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:



மதுரையில், 'புது மதுரை 2035' என்ற விழாவில் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன், 'தொழில் வளர்ச்சியில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மற்ற தென் மாநிலங்கள் அளவுக்கு தமிழகம் தீவிரம் காட்டவில்லை' என, கூறியிருக்கிறார். அவர் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். மற்ற தென் மாநிலங்களை விட, தமிழகம் பின்தங்கியிருப்பதாக, அமைச்சர் ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.


ஏற்கனவே, 'டைடல் பூங்காக்களை அமைப்பதை அறிவிக்கும் அதிகாரம் தனக்கு அளிக்கப்படவில்லை' என சட்டசபையில் பேசினார். 50 சதவீத மது பாட்டில்கள் வரி செலுத்தாமல் விற்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நிதித் துறை அமைச்சராக அவர் இருந்தபோது, 'உதயநிதியும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்து விட்டனர்' என்று கூறியதாக சர்ச்சை வெடித்தது.



தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள், அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன என, பா.ம.க., தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் தான் அமைச்சரின் தற்போதைய பேச்சு அமைந்துள்ளது. தியாகராஜனின் பேச்சு குறித்து, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement