தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் தடை விதிப்பு; அரசு கைகொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு

சென்னை : ஆந்திராவில் உள்ள மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளில், தமிழக மாம்பழங்களை கொள்முதல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல், அங்கு சென்று, தமிழக விவசாயிகள் ஏமாந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தர்மபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்துார், சேலம், வேலுார், மதுரை மாவட்டங்களில் அதிகளவில் மாம்பழங்கள் விளைகின்றன. இங்கு, 3.60 லட்சம் ஏக்கரில் மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.
ஏக்கருக்கு, 2.50 டன் வரை மாம்பழம் உற்பத்தியாவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு, ஏக்கருக்கு மூன்று முதல் 3.50 டன் வரை உற்பத்தியாகியுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் மாம்பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், அறுவடை செய்த மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்தாண்டு கிலோ, 100 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாம்பழம், தற்போது 40 முதல் 50 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை. இதனால், பெரிய அளவில், தமிழக விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்திலும் இதே நிலை தொடர்கிறது. அங்கு சித்துார் மற்றும் நெல்லுார் மாவட்டங்களில், 50க்கும் மேற்பட்ட மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகளில் மாம்பழ கூழ் தயாரிப்பதற்காகவே, அங்குள்ள விவசாயிகள் பெங்களூரா, தோத்தாபுரி, கிளிமூக்கு என, பல பெயர்களில் அழைக்கப்படும் மாம்பழ வகைகளை அதிகளவில் பயிரிட்டு உள்ளனர்.
ஆந்திர எல்லையோர மாவட்டங்களை சேர்ந்த தமிழக விவசாயிகளும், இதே ரக மாம்பழங்களை பயிரிட்டுள்ளனர். இந்த ரக மாம்பழங்கள், கடந்தாண்டு கிலோ, 20 முதல் 25 ரூபாய்க்கு, மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளால் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், நடப்பாண்டு மாம்பழ கூழ் கையிருப்பு அதிகரிப்பால், அவற்றை கொள்முதல் செய்ய, அந்த ஆலைகள் தயக்கம் காட்டுகின்றன. இதையடுத்து, ஆந்திராவில் உள்ள மாம்பழ கூழ் ஆலைகளில் கொள்முதல் விலையாக, ஒரு கிலோ, 12 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில், 8 ரூபாயை, மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகள் வழங்க வேண்டும். மீதமுள்ள நான்கு ரூபாயை, ஆந்திர அரசு மானியமாக வழங்குகிறது.
தமிழகத்தில் உள்ள மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளில், ஒரு கிலோவிற்கு 4 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது; கொள்முதலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஆந்திர எல்லையோர தமிழக விவசாயிகள், ஆந்திராவில் உள்ள ஆலைகளுக்கு எடுத்து சென்று வருகின்றனர்.
அங்கு தமிழக விவசாயிகளிடம் இருந்து மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படாமல் திருப்பி அனுப்புகின்றனர். இதனால், தமிழக விவசாயிகள் ஏமாந்து திரும்புகின்றனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஜே.ஆஞ்சநேயலு கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து மாம்பழ கொள்முதலை நிறுத்த, ஆந்திர அரசு உத்தரவிட்டு உள்ளது. மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளில், ஆந்திர அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அங்கு விவசாயிகளின் ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் ஆராயப்பட்டு, கொள்முதலுக்கான பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளின் செயல்பாட்டை கண்காணிக்க, 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, எந்த உதவியையும் அரசு வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 25,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா