ஆதார் சிறப்பு முகாம் நடத்த வலியுறுத்தல்

உடுமலை, : உடுமலை அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கான ஆதார் பதிவு முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ், உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை, மாணவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

மாணவர்களின் ஆதார் எண்கள் பலவும், பயோமெட்ரிக் பதிவு அப்டேட் செய்யப்படாமல் இருப்பதால், வங்கிக்கணக்குகளில் உதவித்தொகை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் மட்டுமே, உதவித்தொகை செலுத்தப்படுகிறது. இதனால், மாணவர்களின் ஆதார் பதிவுகள் புதுப்பிக்க சிறப்பு முகாம், பள்ளிகளில் கடந்தாண்டு நடத்தப்பட்டது. நடப்பாண்டிலும் சிறப்பு முகாம் நடத்த பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்துகின்றனர்.

தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்களின் ஆதார் பதிவுகளில் மாற்றம் செய்வதற்கு பள்ளிகளில் நடக்கும் முகாமை பயன்படுத்திக்கொண்டனர். ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில்தான் மாணவர்களுக்கான உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் அனைத்து விடுபட்ட மாணவர்களும், ஆதார் புதுப்பித்துக்கொள்ளவும் நடப்பாண்டிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும்' என்றனர்.

Advertisement