ஆம்னி பஸ்சில் வந்த பயணி அதிருப்தி; கோபாலபுரத்தில் இறக்கியதால் பரபரப்பு

பொள்ளாச்சி : புதுக்கோட்டையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் வந்தவரை, பொள்ளாச்சியில் இறக்காமல் கேரளா மாநில எல்லையில் இறக்கி விட்டதால், பயணி அதிருப்தி அடைந்தார். பஸ் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி அருகே வஞ்சியாபுரம் பிரிவைச்சேர்ந்த நடன இயக்குனர் ரஞ்சன்,31. இவர், புதுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் ஊரில் திருவிழாவுக்காக சென்று, பொள்ளாச்சி வருவதற்காக, சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் முன்பதிவு செய்தார்.

தனது மனைவி மற்றும் மகளுடன் நீண்ட நேரமாக புதுக்கோட்டைவந்த பஸ்சில் ஏறினார். பஸ்சில் படுக்கையில் அமர்ந்து இருந்த ரஞ்சன் அசதியால் துாங்கினார்.

பொள்ளாச்சி வந்ததும் ஊழியர்கள், ரஞ்சனுக்கு தெரிவிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து பார்த்த போது, கேரளா நோக்கி பஸ் சென்றதை செல்போன் கூகுள் மேப்பில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஊழியர் மற்றும் டிரைவரிடம் கேட்ட போது முறையான தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

கோபாலபுரம் பகுதியில் அவர்களை இறக்கி விட்டனர். அங்கு இருந்து ஒரு பஸ்சில் பொள்ளாச்சி வந்த அவர், தற்போது அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கண்டனத்தை தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகிறது.

Advertisement