வால்பாறையில் பருவமழை தீவிரம் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

வால்பாறை: பருவமழை தீவீரமடைந்துள்ள நிலையில், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

வால்பாறையில் கடந்த ஒரு வாரமாக, தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், சோலையாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னக்கல்லாறு, கீழ்நீராறு, அக்காமலை, வெள்ளமலை டனல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.

அணைகளின் நீர்மட்டம்



வால்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 123.94 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 4,525 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 879 கன அடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடபட்டுள்ளது.

இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 39.38 அடியாகவும், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், 95.00 அடியாகவும் உயர்ந்தது.

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு(மி.மீ.,)

சோலையாறு - 78, பரம்பிக்குளம் - 30, ஆழியாறு - 3, வால்பாறை - 56, மேல்நீராறு - 75, கீழ்நீராறு - 54, காடம்பாறை -17, சர்க்கார்பதி - 13, வேட்டைக்காரன்புதுார் - 9, மணக்கடவு - 24, துணக்கடவு -18, பெருவாரிப்பள்ளம் - 22, நவமலை - 2, பொள்ளாச்சி - 7.

Advertisement