மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 'பளீச்' துாய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், துாய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 90,124 மக்கள் தொகை உள்ளது.

தினமும், அம்பராம்பாளையம் ஆறு அருகே உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, ஒரு நாளுக்கு, 14 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது.

மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக, 11 மில்லியன் லிட்டர் தினசரி வினியோகிக்கப்படுகிறது. ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக, 107 லிட்டர் வினியோகிக்கப்படுகிறது. நகரில், 17,650 குடிநீர் வீட்டு இணைப்புகளும், 198 பொது இணைப்புகளும் உள்ளன. இது மட்டுமின்றி, மற்ற பயன்பாட்டுக்கு தனியாக போர்வெல் தண்ணீரும் வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும், குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் துாய்மை செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, நகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை மற்றும் குடிநீர் நீர் தேக்க தொட்டிகள், மார்க்கெட் ரோடு நீர் உந்து நிலையத்தில் உள்ள சம்பு, தரை மட்ட தொட்டிகள், அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையம், தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளை மாதந்தோறும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, நகரில் உள்ள அனைத்து தொட்டிகளும் பராமரிப்பு செய்யப்படுகிறது. குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதுடன், தினமும் காலையில், குளோரின் அளவு சரியாக உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement