மத்தியஸ்தம் செய்ய தயார்; இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.


ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் டெஹ்ரானையும், ஈரான் டெல் அவிவ் நகரையும் குறிவைத்து குண்டுமழையை பொழிந்து வருகின்றன. இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, நிபந்தனையின்றி சரணடையுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த உத்தரவை ஈரான் ஏற்க மறுத்துள்ளது. அதோடு, இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நேரடியாகவே எச்சரிக்கையையும் ஈரான் விடுத்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் போர் விமானங்களை குவித்து வருகிறார்.

இந்த நிலையில், இஸ்ரேல், ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்கவும், ஈரான் அமைதியாக அணுசக்தி திட்டங்களை தொடர்வதற்கும் ஒரு தீர்வை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகத்தினர் மத்தியில் பேசிய அவர், "இது ஒரு நுட்பமான பிரச்சினை. ஒரு தீர்வை எட்ட முடியும்," என்றார்.

அப்போது, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் கொலை செய்து விட்டால், ரஷ்யாவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " அத்தகைய சாத்தியக்கூறு பற்றி நான் விவாதிக்கக்கூட விரும்பவில்லை," எனக் கூறினார்.

மேலும் புடின் கூறியதாவது; நாங்கள் யார் மீதும் எதையும் திணிக்கவில்லை. இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியமான வழியை மட்டுமே நாங்கள் முன்மொழிந்துள்ளோம். இறுதி முடிவு அந்த நாடுகளிடமே உள்ளது." எனக் கூறினார்.

முன்னதாக, இஸ்ரேல், ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்வது குறித்த புடினின் முடிவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்துங்கள் என்றும், அதன்பிறகு, இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்தலாம் என்று புடினிடம் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement