ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!

18


புதுடில்லி: ஈரானிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் 110 பேர் டில்லி வந்தடைந்தனர். அவர்கள், ''நாங்கள் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை. இந்திய தூதரகம் உதவி செய்தது'' என தெரிவித்தனர்.


ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே ஆறு நாட்களாக தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. அடுத்தடுத்து சீறிப் பாயும் ஏவுகணைகளால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், ஈரானில் தங்கி பயிலும் இந்திய மாணவர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கான பணிகளை ஈரான் மற்றும் அர்மேனியா நாட்டில் உள்ள இந்திய துாதரகங்கள் மேற்கொண்டுள்ளன. முதற்கட்டமாக, ஈரானில் இருந்து, 110 இந்திய மாணவர்கள், பஸ்கள் வாயிலாக அண்டை நாடான அர்மேனியாவின் தலைநகரம் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர்.



பின், அங்கிருந்து சிறப்பு விமானம் வாயிலாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த விமானம் இன்று (ஜூன் 19) டில்லி வந்தடைந்தது. மாணவர்கள் மீட்பிற்கு உதவிய ஈரான் மற்றும் அர்மேனியா நாடுகளுக்கு இந்தியா நன்றி தெரிவித்து உள்ளனர். டில்லி விமான நிலையத்தில், நாடு திரும்பிய மாணவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.




போர் நல்ல விஷயம் அல்ல!



மாணவர் அமான் அசார் கூறியதாவது: நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் குடும்பத்தினரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.



ஈரானில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்குள்ள மக்கள், குழந்தைகள் அவதி அடைந்து வருகின்றனர். போர் ஒரு நல்ல விஷயம் அல்ல. அது மனிதகுலத்தைக் கொல்கிறது. இவ்வாறு அமான் அசார் வருத்தத்துடன் தெரிவித்தார்.

ஏவுகணையை பார்த்தோம்!




மாணவி மரியம் ரோஸ் கூறியதாவது: இந்திய தூதரகம் ஏற்கனவே எங்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்திருந்தது. நாங்கள் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை.


நாங்கள் மூன்று நாட்களாகப் பயணம் செய்கிறோம், அதனால் நாங்கள் சோர்வாக இருக்கிறோம். எங்கள் தங்குமிடத்தின் ஜன்னல்களிலிருந்து ஏவுகணைகளைப் பார்த்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

@block_P@

தூதரக அதிகாரிகளுக்கு நன்றி!

மாணவர் கசல் கூறியதாவது: நாங்கள் அனைவரும் வீடு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்திய தூதரக அதிகாரிகள் உதவி செய்தனர். அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உர்மியா, டெஹ்ரானில் நிலைமை மோசமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.block_P

Advertisement