பா.ம.க.,வை பிளக்க நினைக்கும் தி.மு.க., முயற்சி தோல்வியில் முடியும்: மீண்டும் சொல்கிறார் அன்புமணி

1

தர்மபுரி: பா.ம.க,வை பிளக்க நினைக்கும் தி.மு.க.,வின் முயற்சி தோல்வியில் முடியும் என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.

தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு யார் யாரிடமோ கேட்கிறோம். அதனை யாரும் செய்யவில்லை. மனதில் இருக்கிறது. பேச வேண்டும் என நிறைய இருக்கிறது. எதையும் வெளிப்படுத்த மாட்டேன். அந்த சூழலில் தான்இருக்கிறேன்.


தர்மபுரி மாவட்டத்தில் வரும் தேர்தலில் வெற்றி பெற போவதில்லை என தி.மு.க.,வுக்கு தெரிந்துவிட்டது. மிகப்பெரிய துரோகம் ஏமாற்றத்தை தி.மு.க., அரசு செய்கிறது. அக்கட்சியை புறக்கணிக்க வேண்டும். நமது சமூகத்தினர் ஒருவர் கூட தி.மு.க.,வுக்கு ஓட்டு போடக்கூடாது. தி.மு.க., நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டது.

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பழனிசாமி ஒரு மாதத்திற்கு முன்பு கொடுத்து இருக்கலாம். கடைசி காலத்தில் கொடுத்ததால் தான் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அவர் கொடுத்தார்.தி.மு.க.,ஆட்சிக்கு வந்த போது அந்த இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால், அவர்கள் தூண்டிவிட்டதால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் சரியாக வாதாடாததால், அதனை நீதிபதிகள் தடை செய்தனர். தரவுகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட், தெரிவித்தது. தரவுகள் அரசிடம் உள்ளது. இதனை ஒரு நாளில் எடுத்து இருக்கலாம். ஆனால் செய்கிறோம் என தினமும் சொல்லி ஏமாற்றினர். தி.மு.க.,வை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என நான் கூறியதற்கு, இட ஒதுக்கீட்டை நிச்சயம் தருவதாக முதல்வர் கூறியதாக ராமதாஸ் கூறினார்.


தி.மு.க., இட ஒதுக்கீட்டை வழங்கவில்லை. மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் சொன்னார். தி.மு.க., செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. மன்னிக்க முடியாத குற்றம். கொடுங்கோல் ஆட்சியை அகற்ற ஒன்றுபடுவோம். செயல்படுவோம்.


நமக்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என தி.மு.க.,நினைக்கிறது. வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால், எதிர்க்கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்கின்றனர். பா.ம.க.,வை பிளக்கும் நினைக்கும் தி.மு.க., முயற்சியின் தோல்வியில் முடியும். மனதில் நிறயை இருக்கு. பிறகு பேசுவோம். உங்களை பார்த்த பிறகு மனதில் பாரம் குறைந்துவிட்டது. தி.மு.க., ஆட்சியை அகற்றுவோம். நமது கூட்டணி ஆட்சி நடைபெறும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement