தி.மு.க., கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு; உண்மை என்கிறார் காங்., முன்னாள் தலைவர்


புதுக்கோட்டை: ''தி.மு.க., கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மையே,'' என தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி:



திருச்சியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை வி.சி., தலைவர் திருமாவளவன் சந்தித்ததை தொடர்ந்து, தி.மு.க., அணியில் இருந்து வி.சி., வெளியேறும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


தி.மு.க., கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியேற வாய்ப்பில்லை. தலைவர்களுக்குள் ஆயிரம் சந்திப்புகள், சாதாரணமாக நடக்கும். அதை வைத்து கூட்டணியை முடிவு செய்துவிட முடியாது.



தி.மு.க., கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, வைகைச்செல்வன் சில கருத்துகளை கூறி இருக்கிறார். அதன் வாயிலாக எதையோ சாதிக்க அவர் நினைத்து, இப்படி செய்துள்ளார். அவருடைய நினைப்பு நடக்காது.


தி.மு.க., கூட்டணிக்குள் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது உண்மையே. கூடுதல் தொகுதி வேண்டும் என மா. கம்யூ., கட்சியினர் கேட்கின்றனர். திருமாவளவனும், அதுபோல் கேட்கிறார். சில கட்சிகள், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என கூறுகின்றனர். இதுபோன்று, அந்தக் கட்சிகள் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை.


தேர்தல் நேரத்தில், ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு, மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். தி.மு.க., - காங்., உள்ளிட்ட அனைத்து கட்சியிலும் முருகனை வழிபடுவோர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement