சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதாக கூறி ரூ.5.8லட்சம் மோசடி செய்த நபர் கைது

கடலுார்: தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி, முகநுாலில் போலி விளம்பரம் செய்து 5லட்சதது 82ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை கடலுார் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்தவர் பரமசிவம்,70. இவர் வெளிநாடு சுற்றுலா தொடர்பாக முகநுாலில் வந்த விளம்பரத்தைப்பார்த்து, ஹரிஹர சுதன் என்பவரை தொடர்புகொண்டார். அவரிடம் தன்னையும், தனது நண்பர்கள் 18பேருக்கும் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்வதற்காக சுற்றுலா பேக்கேஜ் ஏற்பாடு செய்து தரச் சொன்னார்.

அதற்காக 5லட்சத்து 82ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, ஹரிஹர சுதன் சுற்றுலா பேக்கேஜ் ஏற்பாடு செய்து தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பரமசிவம், கடலுார் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கடலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

நேற்று திருப்பூர் மாவட்டம், மடத்துபுரம் அடுத்த கணேசபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன்,36: போலீசார் கைது செய்தனர். இவர் மீது மதுரை மற்றும் சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட் சைபர் கிரைம் போலீஸ்நிலையங்களில் வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ் எனக்கூறி பண மோசடி செய்ததாக வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement