'எந்த வேட்பாளராக இருந்தாலும் துணையாக இருக்க வேண்டும்' பழனியப்பன் பேச்சால் அரூர் தி.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்'

அரூர், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், அரூர் சட்டசபை தொகுதி, தி.மு.க., புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மேற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பேசுகையில், 'அரூர் தொகுதியில் நாம் போட்டியிடுகிற அல்லது எந்த வேட்பாளராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அரூர் தொகுதி, தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்' என்றார்.


இது குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதியில், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில், போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள், தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம், சீட் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பேசிய மாவட்ட செயலர் பழனியப்பன், 'அரூர் தொகுதியில் நாம் போட்டியிடுகிற அல்லது எந்த வேட்பாளராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அரூர் தொகுதி, தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்' என்றார்.
அவரின் இந்த பேச்சு தி.மு.க., தொகுதியில் போட்டியிடவில்லை என்றாலும், கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என, மறைமுகமாக குறிப்பிடுகிறார்.
கடந்த காலங்களில், தி.மு.க., கூட்டணியில், வி.சி.,- மா. கம்யூ., கட்சிகளுக்கு, அரூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. தற்போது அக்கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் உள்ள நிலையில், மாவட்ட செயலரின் பேச்சு, வரும் தேர்தலில் அக்கட்சிகளுக்கு மீண்டும், அரூர் தொகுதி ஒதுக்கப்படும் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். இதனால், தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட காய் நகர்த்தி வந்தவர்கள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.
இவ்வாறு கூறினர்.

Advertisement