குளங்களை துார்வாரி மதகுகளை சீரமையுங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு

திண்டுக்கல்: 'குளங்களை துார்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும், வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், சப் கலெக்டர் வினோதினி பார்த்திபன், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் பாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காயத்ரி, நேர்முக உதவியாளர்(வேளாண்மை) நாகேந்திரன் கலந்து கொண்டனர். குளங்களை துார்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும், வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். மா சாகுபடிக்கு மானியம் வழங்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள்தொடர்பாக 94 மனுக்கள் அளித்தனர்.

விவசாயிகள் விவாதம்



நாகராஜன், அக்கரைப்பட்டி: ரெட்டியார்சத்திரம் தாதன்குளம் தூர்வாரி மதகுகள் அமைக்க வேண்டும்.

கலெக்டர் : நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜன் செல்லப்பா : கூவனுாத்து செங்குளம் துார்வாரப்படாமல் புதர் மண்டி உள்ளது, ஆக்கிரமிப்பும் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்

ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் : தங்கச்சியம்மாபட்டியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. தண்ணீர் குடிப்பதற்கு கூட முடியாமல் உள்ளது. நோய் தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சரி செய்ய வேண்டும்.

கலெக்டர் : நடவடிக்கை எடுக்கப்படும்

பரமசிவம், நிலக்கோட்டை: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 8 கண்மாய்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது.

பெருமாள் : பழநி வீரன் குளம், பாப்பன்குளம் பகுதியில் 40க்கு மேற்பட்ட விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. காளவாசலுக்கு என மாட்டு வண்டியில் மண் அள்ளுகின்றனர். வண்டல் மண் அள்ள அனுமதி கேட்பவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வம், வத்தலக்குண்டு: மஞ்சளாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரப்பன், குஜிலியம்பாறை: சின்ன குளத்தை துார்வாரி கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

வெள்ளகண்ணன், ஆவிளிப்பட்டி: அஞ்சு குளிப்பட்டியில் உள்ள சங்கிலியான் அணைக்கட்டு பராமரிப்புயின்றி ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. அணைக்கட்டை தூர்வாரி பொதுப்பணித்துறை கீழ் கொண்டுவர வேண்டும். மும்மனை மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது.கூட்டத்திற்கு வந்த கன்னிவாடி அரசு தொடக்கப்பள்ளி 3-ஆம் வகுப்பு மாணவன் சித்தார்த் பாண்டியன், இயற்கை விவசாயி நம்மாழ்வார் வேடமணிந்து இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவரை கலெக்டர் சரவணன் பாராட்டி பரிசு வழங்கினார்.

Advertisement