முருகன் மாநாட்டுக்கு மனித சங்கிலி வேங்கைவயலுக்கு ஒன்றுமில்லை ஏன்? திருமாவளவனுக்கு தமிழிசை கேள்வி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் முன்னாள் கவர்னர் தமிழிசை அளித்த பேட்டி:
தமிழகத்தில், அசாதாரண சூழல் நிலவுகிறது. சூரியனார் கோவிலில் முதல்வர் திறந்து வைத்த கட்டடம் இடிகிறது. விவசாயக் கல்லுாரி மாணவர்கள், கட்டடம் இல்லாமல், திருமண மண்டபத்தில் படிக்கின்றனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மருத்துவர்களே பாத யாத்திரை செல்கின்றனர். எல்லாவற்றிலும் தோல்வி அடைந்த அரசாக தி.மு.க., அரசு உள்ளது.
முருக பக்தர்கள் மாநாட்டை அறிவித்ததில் இருந்து முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சியினர் பதற்றம் அடைந்துள்ளனர்.
மாநாடுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டத்தை நடத்திய வி.சி., தலைவர் திருமாவளவன், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், போராட்டம் நடத்தாதது ஏன்?
'இண்டி' கூட்டணியில் ஓட்டை விழவில்லை என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகிறார். இண்டி கூட்டணிக்கு ஓட்டே விழாது என்று சொல்லி இருந்தால், அவர் உண்மையை சொல்லியதாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.
அவருக்கு ஏராளமான ஆசைகள் உள்ளது; வெளியில் வேறு மாதிரி பேசுகிறார். அதேபோல், வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் ஆசை உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், ஓட்டு கிடைக்குமா என தி.மு.க., கூட்டணி கட்சிகளே, கடும் அதிர்ச்சியில் உள்ளன.
2026 சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்; அதற்கு முருகக்கடவுள் எங்களுக்கு துணை புரிவார்.
தமிழகத்தில், சூரியன் உதிக்கிறதோ, இல்லையோ? இரட்டை இலையுடன் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.