4 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை:தமிழகத்தில் புதிதாக நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய, நான்கு இடங்களில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு கல்லுாரிகளிலும், தலா ஐந்து பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கல்லுாரிக்கும், 12 பேராசிரியர்கள் மற்றும் 14 பேராசிரியர்கள் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. நான்கு கல்லுாரிகளுக்கும் ஓராண்டுக்கான செலவுத்தொகையாக தலா, 8.67 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, இப்பகுதிகளில் உள்ள 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெற முடியும். இந்தக் கல்லுாரிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், வேலுார் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலையில், ஐந்து தளங்களுடன் கட்டப்பட்ட கல்வி சார் கட்டடம், துணைவேந்தர் குடியிருப்பு, உதவிப் பேராசிரியர்கள் குடியிருப்புகள், பணியாளர்கள் குடியிருப்பு என, மொத்தம் 36.1 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களையும், முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, பொதுப் பணித்துறை அமைச்சர் வேலு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தலைமை செயலர் முருகானந்தம், உயர்கல்வித் துறை செயலர் சமயமூர்த்தி பங்கேற்றனர்.

Advertisement